Wednesday 11 June 2014

நங்கை நல்லூர் ஆஞ்சநேயா

நங்கை நல்லூர் ஆஞ்சநேயா 

 நங்கை நல்லூர்* ஆஞ்சநேயா 
 ஸ்ரீராமபக்த ஹனுமானே!
எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் - நிம்மதியை 
உன்னடியில் கண்டு கொண்டேன்.                                                 1

துன்பங்களைக் காண்கையிலே என் நெஞ்சில் 
சோகம் வந்து அழுத்துதையா  
உன்னை வந்து பார்க்கையிலே - அனைத்தும் 
ஓடிப்போய் ஒளிந்ததையா.                                                            2

வாழ்க்கையதன் ஓரத்திலே நான் 
பாதை தெரியாது நின்றேன் 
வீழ்த்தும்  மதிமாந்தர் முன்னே - எங்கிருந்தோ 
ஓடி வந்து காத்து நின்றாய்.                                                             3

எண்ணி எண்ணிப் பார்க்கையிலே என்னெஞ்சில்
எங்கும்நீ நிறைந்திருந்தாய்
உன்னையன்றி யாரிடமே என் குறையை 
சொல்லிச் சொல்லி மாய்ந்திடுவேன்?                                            4

சீதையவள் சோகத்திலே 
ஸ்ரீலங்கைதனில் இருக்கையிலே 
பாதைதன்னைக் காட்டி விட்டாய்  - ஸ்ரீராமன் 
சொன்ன சேதி சேர்த்து விட்டாய்.                                                   5

வெஞ்சிறையில் வெந்து விட்டேன் வாழ்க்கை 
பந்தமதில் நொந்து விட்டேன்.
தஞ்சமென உன்னையடைந்தேன் - நீயே 
நல்ல வழி காட்டிடுவாய்.                                                                6

கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்து விட்டேன் - என் 
நெஞ்சத்தையே திறந்து வைத்தேன்.
அஞ்சனையின் மைந்தனே நீ - சொல்லையா 
என்று வந்து காத்திடுவாய்?                                                             7

*'நங்கை நல்லூர்' என்ற இடத்தில் உங்கள் ஊர் பெயரை வைத்துப் பாடலாம்.
சான்று : 'அல்லிக்கேணி ஆஞ்சநேயா',  'நாமக்கல் ஆஞ்சநேயா'. 'தில்லிநகர் ஆஞ்சநேயா'...